தேசிய செய்திகள்

2-வது நாளாக எதிர்க்கட்சிகள் அமளி; இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு தேசிய கீதத்துடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முக்கிய மசோதாக்கள்

இந்த கூட்டத்தொடரில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, வருமான வரி (திருத்தம்) மசோதா, சுப்ரீம் கோர்ட்டு (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்புகள் (திருத்தம்) மசோதா, தேசிய கவுரவத்துக்கு அவமதிப்பு தடுப்பு (திருத்தம்) மசோதா (வந்தே மாதரத்துக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டு சிறை விதிக்கும் மசோதா), சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அபிவிருத்தி (திருத்தம்) மசோதா ஆகிய 6 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

எனினும், நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் கடுமையான அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகள் அமளி

இந்த நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை 2-வது நாளாக கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில், இளைஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இதனை கண்டிக்கும் வகையில், அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால், இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.

ஒத்திவைப்பு

இதன்பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, மக்களவையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.