தேசிய செய்திகள்

"நமது நாட்டில் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளது" - ஜனாதிபதியின் சுதந்திர தின உரை

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.

புதுடெல்லி,

கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

மூவர்ணக் கொடி

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றியதாவது:-

இன்னும் சில மணிநேரங்களில், நமது நாடு தனது சுதந்திரத்தின் 80-வது ஆண்டின் மங்களகரமான தொடக்கத்தைக் காணவிருக்கிறது. நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் இத்திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். நமது மூவர்ணக் கொடி நமது சுதந்திரத்தின் சின்னமாகும்; அதை நாம் மிகுந்த பெருமையுடன் ஏற்றுகிறோம்.

விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம்

கடந்த பத்தாண்டுகளுக்கும் சற்று அதிகமான காலத்தில், நமது நாடு பின்வருவனவற்றைக் கண்டுள்ளது:

• விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி;

• பாரம்பரியம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை; மற்றும்,

• பல தசாப்தங்களாக நீடித்திருந்த பல்வேறு வளர்ச்சி தடைகளை நீக்குதல்.

நமது நாடு மகாத்மா ஜோதிபா பூலேவின் 200-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. சமூக நீதி, கல்வி, பெண்கள் மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் மகாத்மா பூலே மற்றும் கிராந்தி-ஜோதி சாவித்ரிபாய் பூலே ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி, கடந்த சில ஆண்டுகளாக தேசிய அளவில் சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இலவச மருத்துவக் காப்பீட்டு வசதி

25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய நிதிச் சேர்க்கை (financial inclusion) திட்டமான 'பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா'வின் கீழ், சுமார் 59 கோடி கணக்குதாரர்கள் வங்கிச் சேவையில் இணைந்துள்ளனர். இவர்களில் 32 கோடிக்கும் அதிகமான கணக்குதாரர்கள் பெண்கள் ஆவர்.

இலவச உணவுப் பொருட்களை வழங்குவதன் மூலம் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தின் கீழ், 60 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயம், பால் பண்ணை, கோழி வளர்ப்பு, மீன்வளம் மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு 'கிசான் சம்மன் நிதி' மற்றும் 'கிசான் கிரெடிட் கார்டுகள்' ஆகியவை ஆதரவை அளித்துள்ளன.

கலாச்சாரப் பெருமித உணர்வு நாட்டின் உள் வலிமையை வலுப்படுத்துகிறது என்ற விழிப்புணர்வு இன்று நாட்டில் அதிகரித்து வருகிறது.

நமது பாரம்பரியத்தையும் வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து நாம் முன்னேறி வருகிறோம்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

இந்தியா உலகின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறந்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. சிறிய கிராமப்புறக் கடைகள் மற்றும் தெருவோர வியாபாரிகளிடமும் கூட இப்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் பரவலாக நடைபெறுகின்றன. உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் நடைபெறுகின்றன.

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நலத்திட்டங்களின் பலன்களை அரசு மக்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்கியுள்ளது.

நெடுஞ்சாலைகள், நீர்வழிகள், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து என நவீன உள்கட்டமைப்பில் நமது நாடு முன்னெப்போதும் இல்லாத அளவிலான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. இது புதிய தொழில் முயற்சிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.