புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி அமைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கியது. பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்ட நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான வளரும் பருவத்தினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த வயதினர் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனாவுக்கு எதிராக பாதுகாப்பை பெற்றுக்கொள்கின்றனர்.
இந்த வளரும் பருவத்தினரில் இதுவரை 5 கோடியே 4 லட்சம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 1 கோடி பேர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர், இளைய இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. 15 முதல் 18 வயது வரையிலான 1 கோடி பேர் இப்போது கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என கூறி உள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் அனைத்துப்பிரிவினரிலும் 53.61 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 170 கோடியே 87 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.