புதுடெல்லி,
தற்போது வந்துள்ள 21 பேர் கொண்ட குழு உட்பட, பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியர்கள் குழுவை நான் இப்போதுதான் சந்தித்தேன். வெள்ளத்தில் சிக்கியிருந்த அவர்கள் மீட்கப்பட்டு காத்மாண்டுக்கு அழைத்து வரப்பட்டனர். நேபாள ராணுவத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தாயகம் திரும்ப எங்கள் தூதரகம் ஏற்பாடு செய்தது. அவர்கள் நலமுடன் இருப்பதைக் கண்டு நாங்கள் அடைந்த பெரும் நிம்மதியைப் பகிர்ந்துகொள்ளவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்டறியவும் அவர்களை சந்திக்க வந்தேன்.
அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் தொடர்பு கொள்வதில் நாங்கள் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இன்னும் 315-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தொடர்பு கொள்ளப்படவில்லை என்று நாங்கள் கருதுகிறோம். இப்போது வந்துள்ள 21 பேர் கொண்ட குழு உட்பட, பல்வேறு இடங்களிலிருந்து சுமார் 85 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மிகவும் கடினமான அந்த இடத்திலிருந்து தங்களை வெளியேற்ற பெரும் முயற்சி எடுத்த நேபாள ராணுவத்திற்கு அவர்கள் மிகுந்த நன்றியை தெரிவித்தனர். தற்போது, மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பணிகளில் நேபாளத்திற்கு ஆதரவளிப்பதிலேயே எங்கள் கவனம் உள்ளது. இன்றும் கூட நான் காலை வேளையில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசினேன்.
நாங்கள் அவர்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளோம். அவர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர். தங்கள் தேவைகளுக்கு எது பொருத்தமானது என்று அவர்கள் கருதுகிறார்களோ, அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
தற்போது முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு நீர்மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மக்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, நிபுணர்களுடன் இணைந்து உதவ ஒரு குழுவை நாங்கள் அனுப்புகிறோம். மேலும், அவர்களுக்கு 'பெய்லி' வகை பாலங்கள் (bailey bridges) தேவைப்படுகின்றன, எனவே நாங்கள் பாலங்களை அனுப்புகிறோம்.
மருத்துவக் குழுக்களும் அங்கு செல்லக்கூடும். அவர்களுக்கு NDRF (தேசிய பேரிடர் மீட்புப் படை) தேவைப்பட்டால், நாங்கள் அவர்களை அனுப்புவோம். நிவாரணப் பொருட்களுடன் இரண்டு விமானங்கள் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டன, மூன்றாவது விமானம் இன்று புறப்படவுள்ளது.
நேபாள அதிகாரிகளும் அந்நாட்டுப் படைகளுமே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தற்போது இந்தியாவை வந்தடைந்துள்ள 21 பேர் கொண்ட குழுவினரும் நேபாள ராணுவத்தினராலேயே மீட்கப்பட்டனர். எங்கள் தரப்பிலிருந்து நேபாள அரசுக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.