கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தின் ரெயில் நிலையத்தில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து தீப்பொறிகள் சிதறியதால் பயணிகள் பீதியடைந்து ஓடினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே சீல்டா-தான்குனி வழித்தடத்தில் இயங்கும் லோக்கல் ரெயில் ஒன்று தட்சிணேஸ்வர் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அப்போது, ரெயிலின் மேலே இருந்த 11,000 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பி திடீரென அறுந்து விழுந்தது.
இதனால் பயங்கர சத்தத்துடன் தீப்பொறிகள் நாலாபுறமும் சிதறி, கரும்புகை சூழ்ந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரெயிலுக்குள் இருந்த மற்றும் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள், உயிர் பயத்தில் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்த ரெயில்வே தொழில்நுட்பக் குழுவினர் உடனடியாக அந்த வழித்தடத்திற்கான மின்சார இணைப்பைத் துண்டித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சீல்டா-தான்குனி வழித்தடத்தில் ரெயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அறுந்த மின்கம்பியைப் பழுதுபார்த்த பின், ரெயில் போக்குவரத்து மீண்டும் சீரமைக்கப்பட்டது. மின்கம்பி அறுந்து விழுந்ததற்கான காரணம் குறித்து ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.