தேசிய செய்திகள்

சீனா தயாரிப்பு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் பாகிஸ்தான்; 80 சதவீதம் அளவுக்கு இறக்குமதி

2021-25 வரையிலான ஆண்டுகளில் சீனா பெரிய வகை ஆயுதங்களை 47 நாடுகளுக்கு சப்ளை செய்துள்ளது.

புதுடெல்லி

உலக அளவில் ஆயுதங்களை வாங்கி குவிக்கும் நாடுகளின் வரிசையில் கடந்த 2016-20 வரையிலான ஆண்டுகளில் பாகிஸ்தான் 10-ம் இடத்தில் இருந்தது. அதன்பின்னர் 2020-ம் ஆண்டில் கொரோனா பாதிப்புகளால் உலக நாடுகள் முடங்கியபோது, அவை 3 ஆண்டுகளில் மெல்ல மீண்டு வந்தன. எனினும், பாகிஸ்தானோ வெள்ள பெருக்கு, மழைப்பொழிவு அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் கடன் வாங்கும் நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டது. இந்த சூழலில், அந்நாடு அடுத்த 5 ஆண்டுகளில் ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட புதிய அறிக்கை வழியே தெரிய வந்துள்ளது.

2021-25 வரையிலான ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆயுதங்களை வாங்கி குவிப்பதில், 5-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்படி, இந்த இரு காலகட்டங்களுக்கு இடையே அதன் ஆயுத இறக்குமதி 66 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.

இது ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஆயுத இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் ஆகும். பாகிஸ்தானுக்கான முக்கிய ஆயுத வினியோகஸ்தராக நம் மற்றொரு அண்டை நாடான சீனா உள்ளது.

இதன்படி, சீனா தயாரிப்பு ஆயுதங்களை 80 சதவீதம் அளவுக்கு பாகிஸ்தான் வாங்கி குவித்துள்ளது. இந்த 2021-25 வரையிலான ஆண்டுகளில் சீனா 47 நாடுகளுக்கு பெரிய வகை ஆயுதங்களை சப்ளை செய்துள்ளது. அவற்றில் பாகிஸ்தானுக்கு மட்டுமே 61 சதவீதம் ஆயுத ஏற்றுமதி நடந்துள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், 2 ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு என பாதிக்கப்பட்டு உலக நாடுகளிடம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது போன்ற செய்திகள் வெளிவந்த சூழலிலும், பாகிஸ்தான் ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது என்பதும், அதுவும் சீனா தயாரிப்பு ஆயுதங்களை 80 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்துள்ளது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.