பெங்களூரு,
பெங்களூருவில் 11 மாதக் குழந்தையை பெற்றோரே கொன்றுவிட்டு, குழந்தை கீழே விழுந்து இறந்துவிட்டது என்று நாடகமாடினர்.
பெங்களூருவின் கிட்டகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகப்பா. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதியருக்கு 11 மாதக் கைக்குழந்தையும் உண்டு. இந்த தம்பதியரிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தம்பதியரிடையே வழக்கம் போல கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களின் 11 மாத கைக்குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை, குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறி நாடகமாடினர்.
பின்னர் போலீசார் மூலம் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. அப்போது உடற்கூறாய்வு அறிக்கையில் குழந்தையின் உடலில் பலத்த உள் காயங்களும், எலும்பு முறிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரனையில், பெற்ற தந்தையே குழந்தையை கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
அவர்கள் நடத்திய பொய்யான நாடகமும் அம்பலமானது. எனவே குழந்தையின் தந்தை மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்தனர். மேலும் குழந்தையின் மரணம் குறித்து தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.