டெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு கடந்த 13ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்ட அமர்வு இன்று முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியது, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளன.
மேலும், நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளான இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீதான பதவி நீக்க தீர்மானம் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. மேலும், பதவிநீக்க தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
தற்போது எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வியடையும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, ரஷிய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளன. இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்விலும் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.