தேசிய செய்திகள்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்த நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதா

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் காலதாமதமான கட்டண சிக்கல்களுக்கு தீர்வு காண இம்மசோதா உதவுகிறது.

புதுடெல்லி,

எதிர்கட்சிகளின் அமளிக்கிடையே, மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது.

நிலுவை கடன்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை வலுப்படுத்தும் திருத்த மசோதா கடந்த 3-ந்தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மந்திரி ஜிதன்ராம்மஞ்சி, "2014-2015 நிதியாண்டில், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் நிலுவை கடன் அளவு ரூ.10 லட்சம் கோடியாக இருந்தது. இன்று ரூ.38 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது அதிகரித்து வருவதை இது காட்டுகிறது" என்று கூறினார்.

மசோதா நிறைவேற்றம்

இந்நிலையில், நேற்று மக்களவையில் இம்மசோதா எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மாணவர்கள் மீதான தடியடி பிரச்சினையை எழுப்பி அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்களின் அமளிக்கிடையே, மசோதா விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது.

மசோதாவின் நோக்கம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் காலதாமதமான கட்டண சிக்கல்களுக்கு தீர்வு காண இம்மசோதா உதவுகிறது. நிர்வாக கட்டமைப்பை மேம்படுத்துதல், கட்டணம் செலுத்துதலை எளிமைப்படுத்துதல் ஆகியவை மூலம் அந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை களைவதும் மசோதாவின் நோக்கம் ஆகும்.

காலக்கெடு

சர்ச்சைகளை விரைவாக தீர்ப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தல், தீர்வு ஒப்பந்தத்தின்படி நிலுவைத் தொகையை மீட்டெடுத்தல் மற்றும் பணப்புழக்க சிக்கல்களை கையாளுதல் ஆகியவற்றின் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தாமதமான கட்டண சிக்கல்களை தீர்ப்பதற்கான வழிமுறைகள் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

கோர்ட்டுக்கு அதிகாரம்

ஒரு உத்தரவை ரத்து செய்யக்கோரும் மனு 6 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் இருந்தால், தீர்ப்பளிக்கப்பட்ட தொகையில் குறைந்தது 50 சதவீதத்தை சிறு, குறு, நடுத்தர நிறுவன வினியோகஸ்தர்களுக்கு செலுத்த உத்தரவிடும் அதிகாரத்தை கோர்ட்டுகளுக்கு வழங்குவதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31 சதவீதமும், நாட்டின் உற்பத்தி துறையில் 36 சதவீதமும், ஏற்றுமதியில் 41 சதவீதமும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பாக உள்ளன.