தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தின் கண்ணியம், நல்லொழுக்கம் குறைந்து வருகிறது: ஓம் பிர்லா வேதனை

ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பு சட்டப்பேரவை. அதன் கண்ணியம் எல்லா நேரத்திலும் மதிக்கப்பட வேண்டும் என ஓம் பிர்லா கூறினார்.

பாட்னா,

பீகார் சட்டப்பேரவையின் நிறுவன நாளை முன்னிட்டு பாட்னா நகரில், அதிகாரமளிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், வலிமையான ஜனநாயகம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ஜனநாயகத்தின் முக்கிய அமைப்பு சட்டப்பேரவை. அதன் கண்ணியம் எல்லா நேரத்திலும் மதிக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்படவும் வேண்டும் என கூறினார்.

அவர் மக்களவையில் அடிக்கடி இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் அவை நடவடிக்கைகளில் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வது பற்றி குறிப்பிட்டு பேசியதுடன், அப்போது வேதனையையும் வெளியிட்டார்.

இதுபோன்ற செயல்கள் ஜனநாயக அமைப்பின் மதிப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் உறுப்பினர்கள் அவையில், பேச்சுவார்த்தை, காரணத்துடன் கூடிய விவாதம் மற்றும் ஆக்கப்பூர்வ செயல்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.