சூரத்,
குஜராத்தில் ரெயில் பயணியிடம் இருந்து திருடன் ஒருவன் செல்போன் பறித்ததும், பின்னர் அந்த பயணி தவறி விழுந்து ரெயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அசோக் குர்ஜார் (32). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 6-ம் தேதி மாதோப்பூரில் இருந்து சூரத்தை நோக்கி, ஜெய்ப்பூர் - பாந்த்ரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் பொதுப்பெட்டியின் வாசல் பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார்.
ரெயில் குஜராத்தின் பரூச் மாவட்டம் பனோலி ரெயில் நிலையத்தை மெதுவாக கடந்து செல்லும்போது, அந்த நிலையத்தின் பிளாட்பாரத்தில் உள்ள பெஞ்சில் உறங்கி கொண்டிருந்த மர்ம நபர் திடீரென எழுந்து, ரெயிலை நோக்கி ஓடிவந்து அசோக்கின் கையில் உள்ள செல்போனை தட்டிப் பறித்தான்.
பதறிப்போன அசோக் உடனே செல்போனை எட்டிப்பிடிக்க முயன்றபோது, பிளாட்பாரத்தில் தவறி விழுந்தார். சுமார் 100 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்ட அவர், பிறகு தண்டவாளத்தில் விழுந்து ரெயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைப் பார்த்த அந்த திருடன் உடனே தனது முகத்தை துண்டால் மூடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றான். அவனது கூட்டாளி ஒருவன், பிளாட்பாரத்தில் விழுந்த பொருளை எடுத்து சென்றான். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ரெயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், செல்போன் பறித்த நபர் தனது முகத்தை மூடிக்கொண்டு தப்பி செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.
இதுபற்றி ரெயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.கே. ராணா கூறுகையில், “இந்தச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம்” என்றார்.
பனோலி ரெயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.