புதுடெல்லி,
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பல்வேறு உலக நாடுகளில் சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் மே 25 முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை பரவல் காரணமாக உள்நாட்டு விமானங்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிகை கடந்த ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 63 சதவீதம் குறைந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த மே மாதம் உள்நாட்டு விமானங்களில் சுமார் 21 லட்சம் பயணிகள் பயணம் செய்திருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் 57 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையின் போது தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.