டெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு நேற்று காலை 7.45 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் அறிவித்தது.
அதேபோல், மாலை 6.45 மணிக்கு துபாய்க்கு புறப்பட இருந்த மற்றொரு ஸ்பைஸ் ஜெட் விமானமும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. 2 விமானங்களிலும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். 2 விமானங்களும் புறப்படும் நேரத்தை தொடர்ந்து மாற்றியமைத்து பின்னர் பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் அந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகள் டெல்லி விமான நிலையத்திலேயே தஞ்சமடைந்தனர். பின்னர், அந்த 2 விமானங்களிலும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்த பயணிகள் விமான நிலையத்திற்குள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.