தேசிய செய்திகள்

‘என் மகனை தொந்தரவு செய்யாதீர்கள்; என்னிடம் விசாரணை நடத்துங்கள்’- ப.சிதம்பரம் வேண்டுகோள்

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தனது மகனை தொந்தரவு செய்யாமல் சி.பி.ஐ. அதிகாரிகள் தன்னிடமே விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு

மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், இதன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த 13-ந்தேதி சம்மன் அனுப்பினர்.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தவறான தகவல்களை பரப்புவதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) பரிந்துரையை ஏற்று நான்தான் ஒப்புதல் அளித்தேன். எனவே இந்த விவகாரத்தில் எனது மகனை தொந்தரவு செய்யாமல் என்னிடமே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் தாங்கள் வழங்கிய பரிந்துரை செல்லுபடியாகும் என சி.பி.ஐ. முன் எப்.ஐ.பி.பி. அதிகாரிகள் ஏற்கனவே அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

கேபினட் குழுவுக்கே உரிமை

முன்னதாக ஏர்செல் மேக்சிஸ் தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில், மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான மொரீஷியசை சேர்ந்த குளோபல் கம்யூனிகேசன் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் 800 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய அனுமதி கேட்டு இருந்ததாகவும், இது அப்போதைய இந்திய மதிப்பில் ரூ.5,127 கோடி எனவும் கூறப்பட்டு இருந்தது.

இத்தகைய முதலீட்டுக்கு அனுமதி வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழுவுக்கு மட்டுமே உரிமை உண்டு எனவும் அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ளது.

கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் விளக்கம்

இதற்கிடையே கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் அருண் நடராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுப்பு தெரிவித்ததாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி சி.பி.ஐ. முன் ஆஜராகி அனைத்து கேள்விகளுக்கும் பதில்அளித்தார். பின்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் கடந்த பிப்ரவரி 2-ந்தேதி சிறப்பு கோர்ட்டு விடுவித்தது. மேலும் வழக்கின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு விட்டன.

எனவே, இந்த வழக்கில் ஆஜராகுமாறு புதிதாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு கார்த்தி சிதம்பரத்தின் வக்கீல் என்ற முறையில், சி.பி.ஐ.க்கு நான் பதில் அனுப்பினேன். அதில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு வழக்கு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்ட நிலையில், புதிதாக சம்மன் அனுப்ப சி.பி.ஐ.க்கு அதிகாரம் உண்டா? என சட்டரீதியான ஆட்சேபனை எழுப்பி உள்ளேன்.

இது குறித்து முதலில் முடிவு எடுக்குமாறும், அதுவரை கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராக வலியுறுத்தக்கூடாது எனவும் சி.பி.ஐ.க்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த அதிகார ஆட்சேபனை குறித்த கடிதத்துக்கு சி.பி.ஐ.யின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இவ்வாறு அருண் நடராஜன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...