புதுடெல்லி,
ரெயில்கள் நிரம்பி வழிகிறது, மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இதனால் இந்திய பொருளாதாரம் நன்றாகத்தான் உள்ளது என்று மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி கூறினார்.
இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவருவதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நடவடிக்கைகளே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என குற்றம்சாட்டினார்கள். நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் பொருளாதார வீழ்ச்சி பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்து ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி கூறியதாவது:-
விமான நிலையங்கள் நிரம்பி வழிகிறது. ரெயில்கள் அனைத்தும் பயணிகளால் நிரம்பி வருகிறது. மக்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவையெல்லாம் நாட்டின் பொருளாதாரம் நன்றாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
சிலர் பிரதமர் நரேந்திர மோடியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதற்காகவே பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டதாக கூறுகிறார்கள்.
3 வருடங்களுக்கு ஒருமுறை பொருளாதார வளர்ச்சியில் ஒரு தேக்கநிலை ஏற்படும். இது ஒரு சுழற்சி முறை. அதன்பின்னர் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும். இவ்வாறு சுரேஷ் அங்காடி கூறினார்.