தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்: என்ன தெரியுமா?

ஆதாரில் உள்ள விவரங்கள் தேவையின்றி மற்றவர்களுக்கு தெரிவதைத் தடுக்க புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் குழந்தையை சேர்க்க வேண்டும் என்றாலும் கூட ஆதார் கார்டு விவரங்களே பிரதானமாக கேட்கப்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரில் உள்ள விவரங்கள் தேவையின்றி மற்றவர்களுக்கு தெரிவதைத் தடுக்க புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள், புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க, ஆதாரில் புகைப்படம், முகவரி போன்றவை இருக்காத வகையில், புதிய ஆதார் அட்டையை ஆதார் ஆணையம் கொண்டு வர உள்ளது. தற்போது ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற விவரங்கள் உள்ளன. எனவே இவற்றை நகல் எடுத்து கொடுத்தால் அதை பெறுபவர்களுக்கு தனிப்பட்ட விவரங்கள் தெரிகிறது. இது எளிதில் தவறாக பயன்படுத்தப்படலாம்.

இதனைத் தடுக்கும் விதமாக, ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் க்யூஆர் கோடு மட்டும் அட்டையில் தெரியும் வகையில் வடிவமைக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டுள்ளது. க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து, சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை சரிபார்க்க முடியும். இந்த புதிய மாற்றம் எப்போது கொண்டு வரப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இது பயன்பாட்டுக்கு வந்தால் மோசடிகள் தடுக்கப்படும் என்று தெரிகிறது.