தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் : டெண்டர் கோரிய ரிசர்வ் வங்கி

10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளைத்தான் முதற்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றி சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக தொடங்கியுள்ளது.

டெண்டர்

சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு காகித நோட்டுகள் விரைவில் கிழிந்துவிடுவதால், அதற்கு மாற்றாக பிரத்யேக பாலிமர் தாள்களை சப்ளை செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது.

டெண்டர் கடைசி நாள்

இந்த திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள சர்வதேச நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக குறிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்களிடம் புழங்குவதால் விரைவில் சேதமடையும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளைத்தான் முதற்கட்டமாக பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றி சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

பழைய நோட்டுகள் செல்லுமா?

புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது உங்களிடம் இருக்கும் காகித ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாமல் போகாது. காகித நோட்டுகளும், பிளாஸ்டிக் நோட்டுகளும் சந்தையில் சமமாகவே புழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.