புதுடெல்லி,
2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரீத்திக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் இளம் புயல் பிரீத்தி பவார், கனடா வீராங்கனை ஸ்கார்லெட் டெல்கடோவை எதிர்கொண்டார்.
போட்டியின் தொடக்கம் முதலே மின்னல் வேக குத்துகளை பறக்கவிட்ட பிரீத்தி, 5-0 என்ற கணக்கில் எதிராளியை நிலைகுலைய செய்து, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது இந்த காமன்வெல்த் தொடரில் இந்தியக் குத்துச்சண்டை அணிக்குக் கிடைத்த முதல் தங்க பதக்கமாகும்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“காமன்வெல்த் பெண்களுக்கான 54 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கம் வென்ற பிரீத்திக்கு வாழ்த்துகள். அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். வரும் காலங்களில் அவர் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.