கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை - சந்திரசேகர் ராவ் குற்றச்சாட்டு

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டினார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஜாக்டியால் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில், 'பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 10 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதன்மூலம் 50 லட்சம் பேர் வேலை இழந்து இருக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டுக்கு பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை' என விமர்சித்தார்.

விவசாயம், மின்சாரம், வளர்ச்சி என எந்த துறையாவது நாட்டில் வளர்ச்சி கண்டிருக்கிறதா? என கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக எந்த இடத்திலும் விவாதத்துக்கு தயார் எனவும், மத்திய அரசின் திறமையின்மையால் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு மாநிலம் இழந்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.

லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதை சுட்டிக்காட்டிய சந்திரசேகர் ராவ், அறிவுஜீவிகள், இளைஞர்கள் இது குறித்து சிந்திக்குமாறும், இந்த தீய பாரம்பரியம் ஒழிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT