தேசிய செய்திகள்

மேற்கு வங்கத்தில் பிரசாரத்திற்கு நடுவே சாலையோர கடையில் சாப்பிட்ட பிரதமர் மோடி

பிரதமரைக் கண்டதும் சாலையோர வியாபாரிகளும், பொதுமக்களும் உற்சாகமடைந்தனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4 இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் ஜர்கம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.

பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த பிரதமர் மோடி, திடீரென தனது வாகனத்தை நிறுத்துமாறு கூறினார். பின்னர் காரில் இருந்து இறங்கிய அவர், அங்கு சாலையோரம் இருந்த உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைக்கு சென்றார். பிரதமரைக் கண்டதும் அங்கிருந்த மக்களும், வியாபாரிகளும் உற்சாகமடைந்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்த வியாபாரியிடம் நலம் விசாரித்த பிரதமர், அவரிடம் தனக்கு ‘ஜல்முரி’ என்ற உணவு பதார்த்தம் வேண்டும் என்று கேட்டார். ‘ஜல்முரி’ என்பது பொரி அரிசி, பச்சை மிளகாய் மற்றும் பிற மசாலா பொருட்கள் கலந்து செய்யப்படும் உணவு பதார்த்தம் ஆகும். இது மேற்கு வங்கத்தில் பிரபலமான சாலையோர உணவாக திகழ்கிறது.

இதனை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி, அதற்கான பணத்தை வியாபாரியிடம் கொடுத்தார். கடைக்காரர் அந்த பணத்தை வாங்க மறுத்தபோது, பிரதமர் மோடி, ‘பணத்தை வாங்கி கொள்ளுங்கள்’ என்று வற்புறுத்தி பணத்தை கொடுத்தார். இதையடுத்து கடைக்காரர் பணத்தை வாங்கிக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோவை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, ‘பரபரப்பான ஞாயிற்றுக்கிழமையில், பிரசாரத்திற்கு நடுவே சுவையான, காரசாரமான ஜல்முரியை சாப்பிட்டு மகிழ்தேன்’ என்று பதிவிட்டுள்ளார்.