டெல்லி - மீரட் அதிவிரைவு ரயில் வழித்தடத்தின் முழு 82 கி.மீ பாதை கட்டுமானம் நிறைவடைந்த நிலையில் இன்று இந்தியாவின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை மற்றும் மீரட் மெட்ரோ சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனால் டெல்லி- மீரட் அதிவிரைவு மெட்ரோ முழுமையாக இன்று செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், "இன்று முதல் முறையாக, ஒரே மேடையில் இருந்து, நமோ பாரத் விரைவு ரயில் மற்றும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்தேன். பாஜவின் இரட்டை இன்ஜின் அரசின் பணி கலாசாரத்தை பிரதிபலிக்கிறது.அடிக்கல் நாட்டப்பட்ட திட்டத்தை முடிக்க நாம் இரவும் பகலும் உழைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
டெல்லி–காசியாபாத்–மீரட் நமோ பாரத் வழித்தடத்தில் மொத்தம் 16 நிலையங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 11 நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் டெல்லியில் இருந்து மீரட் நகருக்கு ஒரு மணி நேரத்தில் பயணிக்கலாம். ரெயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு, ஷதாப்தி நகர் முதல் மீரட் தெற்கு வரையில் பிரதமர் மோடி ரயிலில் பயணித்தார். அவருடன் பயணித்த அதிகாரிகள் நமோ பாரத் ரயில் திட்டம் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர். அப்போது சக பயணிகளுடன் பிரதமர் மோடி உரையாடினார்.