தேசிய செய்திகள்

‘பிரதமர் மோடி சிங்கம் போன்றவர்; ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்’ - ஏக்நாத் ஷிண்டே

உத்தவ் தாக்கரே தனது பொதுக்கூட்டத்தை பாகிஸ்தானில் நடத்தவேண்டும் என துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.

மும்பை,

மும்பையில் சிவசேனா சார்பில் நடந்த தசரா பொதுக்கூட்டத்தில் மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசு யாரோ ஒருவரின் அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தானை திரும்பி தாக்கவில்லை. இது கோழைத்தனம், நேர்மையற்ற தன்மை. இது இந்திய மக்களுக்கு செய்த துரோகம். ஆனால் அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். ரத்தத்திற்கு, ரத்தத்தால் பதிலடி கொடுத்தார்.

நமக்கு பாகிஸ்தான் யார்? அது ஒரு நரியாகும். சிங்கத்தின் தோலை அணிந்திருப்பதன் மூலம் அதனால் சிங்கமாக மாற முடியாது. சிங்கம் எப்போதும் சிங்கம்தான், பிரதமர் மோடி சிங்கம் போன்றவர். முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, இந்திய ராணுவத்தின் வீரத்தை குறித்து கேள்வி எழுப்பியது. பாகிஸ்தானின் குரலாக மாறியது. உத்தவ் சிவசேனா தசரா பொதுக்கூட்டத்தை பாகிஸ்தானில் நடத்தியிருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை நீங்கள் தலைமை விருந்தினராக அழைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT