தேசிய செய்திகள்

தெலுங்கானா: ரூ. 9 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்...!

பிரதமர் மோடி 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஐதராபாத்,

பிரதமர் மோடி 3 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இன்று காலை கர்நாடகா சென்ற பிரதமர் மோடி பெங்களூருவில் வாழும் கலை அமைப்பின் 45வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றார். அங்கு ரூ. 9 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற முடிவுற்ற பல திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ஐதராபாத்-பனாஜி பொருளாதார வழித்தடத்தில் குடபெல்லூரில் இருந்து மகபூப் நகர் வரை ரூ.3 ஆயிரத்து 175 கோடி மதிப்பில் நடைபெற உள்ள நெடுஞ்சாலைப்பணி, ஜகீராபாத்தில் ரூ.2 ஆயிரத்து 350 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள தொழிற்பூங்கா போன்றவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். வாரங்கலில் ரூ.1 ஆயிரத்து 700 கோடியில் அமைக்கப்பட்ட மெகா ஜவுளிப்பூங்காவை திறந்து வைக்கிறார். ஐதராபாத் சிந்து மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தெலுங்கானா பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி இன்று இரவே குஜராத் செல்கிறார். அவர் நாளை குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் நடைபெறும் சோம்நாத் அம்ருத் மோட்சவ் விழாவில் பங்கேற்கிறார்.