தேசிய செய்திகள்

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை சுற்றுப்பயணம்

பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அமராவதி,

பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க, நாளை (ஆகஸ்ட் 1ம் தேதி) ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சர்வதேச விமான நிலையம்

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில், ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவும், அவற்றை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். விமானப் போக்குவரத்தை வலுப்படுத்தவும் பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கவும் ரூ.5,640 கோடி செலவில் அதிநவீன 'கிரீன்பீல்ட்' விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய முனையத்தின் வடிவமைப்பு ஆந்திரப் பிரதேசத்தின் 'சுட்டிலு' (Chuttilu) குடிசைகள், அரக்கு பள்ளத்தாக்கு மற்றும் பறக்கும் மீன் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் ஆலை

தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தின் முதல் செமிகண்டக்டர் (semiconductor) உற்பத்தி ஆலைக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டுகிறார்.

ராமகிருஷ்ண ஆசிரமம்

இதனையடுத்து கர்நாடகாவின் மைசூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையமான 'விவேக ஸ்மாரகா'-வை பிரதமர் திறந்து வைக்க உள்ளார். 1892 நவம்பரில் சுவாமி விவேகானந்தர் மைசூருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையை 'விவேக ஸ்மாரகா' நினைவுபடுத்துகிறது.

பயண திட்டம்

நாளை காலை சுமார் 11 மணியளவில், ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டம் போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனைய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுவார்.

காலை சுமார் 11:30 மணியளவில், அவர் விமான நிலையத்தை திறந்து வைப்பதுடன், போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், அவற்றை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் உள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர் கூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுவார்.

அதனைத் தொடர்ந்து, பிற்பகல் சுமார் 3:30 மணியளவில், மைசூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார இளைஞர் மையமான 'விவேக ஸ்மாரகா'-வை பிரதமர் திறந்து வைப்பார். இந்நிகழ்ச்சியிலும் அவர் கூடியிருப்போர் மத்தியில் உரையாற்றுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.