ஜர்கிராம்
மேற்கு வங்காள அரசின் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து, மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, மேற்கு வங்காளத்தின் ஜர்கிராம் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, திடீரென வாகனத்தில் இருந்து இறங்கிய பிரதமர் மோடி, சாலையோரம் இருந்த கடைக்கு சென்று, ஆர்வத்துடன் காரப்பொரி கேட்டு வாங்கி சாப்பிட்டார்.
அந்த கடையில் மிக்சர், பொரி, உள்ளிட்ட பல்வேறு பண்டங்களும் தூய்மையான முறையில், வரிசையாக பாட்டிலில், அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவரை பார்த்த ஆச்சரியத்தில் குழந்தைகளும், பெண்களும் கடையின் முன் குவிந்தனர்.
இதுபற்றிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலானது. அந்த வீடியோ 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. பேஸ்புக்கில் 90 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. அதனுடன் நில்லாமல், காரப்பொரியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து உள்ளது.
கூகுளில் காரப்பொரியை பற்றிய தேடல் 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் உச்சமடைந்து இருந்தது. பலரும் அது என்ன வகையான பண்டம் என ஆவலுடன் பார்த்துள்ளனர். பிரதமர் மோடியின் செயலால் காரப்பொரியை பற்றிய தேடலும் அதிகரித்து உள்ளது.