புதுடெல்லி,
மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பிளஸ்-2, பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகளும், கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 26, பிளஸ்-2 வகுப்புகான பொருளியல் பாடம் தேர்வு நடைபெற்றது. ஆனால், இந்த தேர்வு நடைபெறும் முன்னரே, வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவலை சிபிஎஸ்இ மறுத்து இருந்தது.
அதேபோல், இன்று (28.03.2018) பத்தாம் வகுப்புக்கான கணக்கு தேர்வு நடைபெற்றது. கணக்கு தேர்வுக்கான வினாத்தாளும் வாட்ஸ் அப்பில் கசிந்ததாக தகவல் பரவியது. இந்த தகவல் காட்டுத்தீ போல் நாடு முழுவதும் பரவியதையடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு கணக்கு மற்றும் 12 ஆம் வகுப்பு பொருளியல் ஆகிய பாடங்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகாரையடுத்து மறு தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்து உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ் இ தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அதிருப்தி அடைந்து இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தனது அதிருப்தியை தெரிவித்ததாகவும், இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு வட்டார தகவல்கள் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.