புதுடெல்லி,
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி, தொழில் அதிபர் மெகுல் சோஷி முக்கிய புள்ளியாக உள்ளனர். சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் கைது செய்து உள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகும் முன்பே, வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் நிரவ் மோடி தப்பி ஓடினார். இதையடுத்து, நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகளை இந்திய விசாரணை முகமைகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.