திருவனந்தபுரம்,
கேரளா - தமிழ்நாடு எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், அறுவடைக்குத் தயாராக இருந்த 1,566 கஞ்சா செடிகளை அதிரடி சோதனை மூலம் போலீசார் கண்டறிந்து அழித்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் அட்டப்பாடி மலைக்கிராம வனப்பகுதிகளில், சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இன்று (சனிக்கிழமை) எல்லைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் இணைந்து குறிப்பிட்ட வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அடர்ந்த காட்டுப்பகுதியில் சமூக விரோதிகளால் ரகசியமாக பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் செழித்து வளர்ந்திருந்த 1,566 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்தனர். அனைத்து கஞ்சா செடிகளையும் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்து, தீ வைத்து முழுமையாக அழித்தனர்.
மனித நடமாட்டம் இல்லாத அடர்ந்த மலைப்பகுதியைத் தேர்ந்தெடுத்து, இந்த சட்டவிரோத சாகுபடியில் ஈடுபட்ட கும்பல் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.