ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் தலமடுகு மண்டலத்தில் உள்ள ருய்யாடி கிராமத்தில், 4 வயது சிறுமியை கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக இரண்டு பெண்கள் கடத்தி சென்ற பகீர் சம்பவம் நடந்துள்ளது. புகார் பெற்ற வெறும் 6 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்ட தனிப்படை போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ருய்யாடி கிராமத்தை சேர்ந்த அத்ராம் ஜங்கு, கப்லி பாய் தம்பதியரின் 4 வயது பெண் குழந்தை, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள். மாலை வேளையாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கிராமம் முழுவதும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் திகைத்துப்போன பெற்றோர், கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பதிவு செய்தவுடன் அதிரடியில் இறங்கிய மாவட்ட எஸ்பி அகில் மகாஜன், குழந்தையை தேட உடனடியாக 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, நைதம் நாகு பாய் என்ற பெண், அச்சிறுமியை பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு அடையாளம் தெரியாத சிலரிடம் ஒப்படைக்கும் அதிர்ச்சி காட்சிகள் சிசிடிவியில் சிக்கின.
இந்த தடயத்தை வைத்து போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். நள்ளிரவு நேரத்தில், ஆதிலாபாத் நகரின் மகாலட்சுமிவாடா பகுதியில் சிறுமி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டதோடு, கடத்தலில் ஈடுபட்ட நைதம் நாகு பாய் மற்றும் கும்மடிவார் பாரதி ஆகிய இரண்டு பெண்களையும் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் அந்த சிறுமியை ஒரு மனிதக் கடத்தல் நெட்வொர்க்கிற்கு நல்ல விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு கடத்தியதாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெற்றோர் தங்களது மகளை பத்திரமாக மீட்ட காவல்துறைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் இந்த அதிவேக அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.