பசவேஸ்வராநகர்:
பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன், வாலிபர் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் திருமணத்திற்கு வாலிபர் மறுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் பசவேஸ்வராநகர் போலீசில் புகார் அளிக்க சென்றார். அப்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த சதீஷ், வாலிபரை திருமணம் செய்து வைப்பதாக இளம்பெண்ணிடம் கூறி உள்ளார்.
பின்னர் பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கி அதில் இருந்த ஆதாரங்கள் அனைத்தையும் அவர் அழித்துள்ளார். இதுகுறித்து அறிந்த இளம்பெண், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்திடம் புகார் அளித்தார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ், பலாத்கார வழக்கில் ஆதாரங்களை அழித்தது உறுதியானது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீசை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டார்.