தேசிய செய்திகள்

திரையரங்குகளில் பாப்கார்ன் விலை ரூ.600, தண்ணீர் ரூ.90; அண்டை மாநிலத்தில் அவலம்

நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது.

கொச்சி

கேரளத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பாப்கார்ன் விலை ரூ.600-க்கும், ரூ.1 லிட்டர் தண்ணீர் ரூ.90-க்கும் விற்கப்படும் அவலம் உள்ளது.

பொதுவாக வார விடுமுறை தினம், பண்டிகை காலங்களில் வீடுகளில் கொண்டாட்டம் களைகட்டும். அதிலும், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்களை கண்டு களித்து விட்டு வரும் வழக்கம் பலரிடமும் உள்ளது. அப்படி செல்லும்போது, படத்தில் சிறிது நேரம் இடைவேளை விடப்படும்.

நொறுக்குத்தீனிகள்

அப்போது திரையரங்கில் உள்ள கடைகளில் விற்கப்படும் முறுக்கு, கடலை மிட்டாய் உள்ளிட்ட நொறுக்குத்தீனிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கி உண்பார்கள். ஆனால், அது ஒரு காலம் என்பது போல் தற்போது நடைமுறை உள்ளது.

ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாகவே, நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் விற்கப்படும் நொறுக்குத்தீனிகள், தின்பண்டங்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது என்று பரவலான கருத்துகள் உள்ளன. இந்த சூழலில் கேரளம் மாநிலத்தில் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகள்

இந்த ஆய்வில் கிடைத்த தகவலின்படி கேரளத்தில் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் அரங்குகளில், பாப்கார்ன், சுத்தமான தண்ணீர் மற்றும் குளிர்பானங்களின் விலை அதிக அளவில் உள்ளது.

அங்கு பாப்கார்ன் ரூ.295 முதல் ரூ.600 வரை விற்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுபோல் 510 மில்லி தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.70 வரையிலும், ஒரு லிட்டர் பாட்டிலுக்கு ரூ.90 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்பானங்களும் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன.

அதிக கட்டணம்

இருப்பினும் திரையரங்கம், நகரம், பொருளின் அளவு, பிராண்ட் மற்றும் காம்போ சலுகை ஆகியவற்றை பொறுத்து விலைகள் மாறுபடுகின்றன. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் உள்ள மல்டி பிளக்ஸ் அரங்குகளில், 90 கிராம் சாதாரண பாப்கார்ன் சுமார் ரூ.149-க்கும், 130 கிராம் பெரிய பாப்கார்ன் ரூ.179-க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரையை சூடாக்கித்தயாரிக்கப்படும் பாகுடன் கூடிய பாப்கார்னுக்கு பொதுவாக ரூ.249 முதல் ரூ.299 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற அதிக கட்டணத்துடன் கூடிய பொருட்களின் விற்பனையால், நல்ல திரைப்படங்களை பார்க்க பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்றாலும், குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகளை வாங்கி கொடுக்க முடியாமல் திணறி, சலிப்புடனேயே படம் பார்த்து விட்டு வெளியேறும் நிலை காணப்படுகிறது.

SCROLL FOR NEXT