ஐதராபாத்,
வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கான ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட பிரபல பெண் யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் நந்தனா. இவர் யூடியூப்பில் தன்னை பாலோ செய்வர்களை லண்டனில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது வார்த்தைகளை நம்பிய அவரின் யூடியூப் பாலோயர்கள் லட்சக்கணக்கான ரூபாய் நந்தனாவுக்கு அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட நந்தனா தனது கணவருடன் வெளிநாடு தப்பிச்சென்றார்.
இதையடுத்து, யூடியூபர் நந்தனா மற்றும் அவரது கணவர் மீது விஜயவாடாவின் இப்ராகிம் பட்டினம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பணமோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நந்தனாவை தேடி வந்தனர். மேலும், வெளிநாடு தப்பிச்சென்ற நந்தனா மீது கடந்த ஆண்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்த நந்தனா இன்று ஆந்திர மாநிலம் ஐதராபாத் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை பரிசோதனை செய்த விமான நிலைய ஊழியர்கள் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், யூடியூபர் நந்தனாவை கைது செய்தனர்.