புதுடெல்லி,
"இளைஞர்களை கவர இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' போடுங்கள்..." என்று மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
மோடி போட்ட 'ரீல்ஸ்': நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் மோடி, 'இளைய தலைமுறையினருடன் மந்திரிகள் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்தினார். இதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரீல்ஸ்' மற்றும் வீடியோக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொண்டார்
நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செல்பி வீடியோவை வெளியிட்டார்.
அதில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக 'விரைவு' நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று பேசீனார். நமது நாட்டின் இளைய தலைமுறையினரின் நலனும், எதிர்காலமும் தான் இந்த அரசுக்கு மிக முக்கியம். மாணவர்களின் கனவுகளைச் சிதைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை விரைந்து நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. இதனால் ஒரே நாளில் அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10.2 கோடியாக (102 Million) உயர்ந்து உலகளவில் புதிய சாதனையை படைத்துள்ளது.