போபால்,
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் துணை அஞ்சலக அதிகாரியாக இருப்பவர் விஷால் அஹிர்வார். அஞ்சலக முதலீட்டாளர்களின் ரூ.1 கோடிக்கு மேற்பட்ட சேமிப்பு பணத்தை இவர் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
முதலீட்டாளர்கள் தங்கள் பணம், பாஸ்புக்கில் பதிவு செய்யப்படாததை அறிந்து சந்தேகப்பட்டு புகார் கொடுத்தனர். பூர்வாங்க விசாரணையில், அந்த பணம் அஞ்சலகத்தில் கூட இல்லை என்று தெரிய வந்தது. விஷார் அஹிர்வார் மீது சந்தேகம் அடைந்து விசாரித்தபோது, அவர் கிரிக்கெட் சூதாட்டத்துக்கு அந்த பணத்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.