தேசிய செய்திகள்

புதிய கல்வி மந்திரி: பிரகலாத் ஜோஷி நியமனம்

மாணவர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் காரணமாக நாடு தழுவிய அளவில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய கல்வி அமைச்சகம் தொடர்ச்சியான சர்ச்சைகளுக்கும், கொள்கை முரண்பாடுகளுக்கும் மையப்புள்ளியாகவே இருந்து வருகிறது. மற்ற துறைகளை விட கல்வித்துறையில் மந்திரிகள் அடிக்கடி மாற்றப்படும் போக்கு காணப்படுகிறது.

2014-ல் கல்வி மந்திரியாக பொறுப்பேற்ற ஸ்மிருதி இரானியின் பதவிக்காலம் சர்ச்சைகளால் நிறைந்தது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமுலாவின் தற்கொலை மற்றும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெடித்த மாணவர் போராட்டங்கள் ஆகியவை நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மேலும், சென்னை ஐஐடி-யில் செயல்பட்டு வந்த மாணவர் அமைப்பான 'அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்' தடை செய்யப்பட்டதும் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்தது. 2024ல் அமேதி தொகுதியில் தோல்வியுற்றார். தற்போது, கட்சியில் எந்த முக்கியப் பொறுப்பிலும் இல்லை.

அதைத் தொடர்ந்து, 2016ம் ஆண்டில் பிரகாஷ் ஜாவடேகர் அத்துறைக்கு மந்திரியாக வந்தார். 2018-ல் 10-ஆம் வகுப்பு கணிதம் 12-ஆம் வகுப்பு பொருளாதாரத்திற்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது. மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் பிரகாஷ் ஜாவடேகர் சுற்றுச்சூழல் மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பிறகு, 2019-ல் கல்வித்துறையில் இருந்து மாற்றப்பட்டார். பின்னர் 2021-ல் நடந்த மிகப்பெரிய அமைச்சரவை மாற்றத்தின் போது, எந்த முன்னறிவிப்புமின்றி மந்திரி பதவியில் இருந்தே தூக்கியெறியப்பட்டார்

2019ல் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்' மத்திய கல்வி மந்திரியாக பொறுப்பேற்றார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசியக் கல்விக் கொள்கை இவரது காலத்தில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு சவால்களை அமைச்சகம் சந்தித்தது. 2024 தேர்தலில் இவரது சொந்தத் தொகுதியான ஹரித்துவாரில் போட்டியிட டிக்கெட்டும் மறுக்கப்பட்டு, முழுமையான அரசியலில் இருந்து வெளியேறிவிட்டார்.

2021ல் தர்மேந்திர பிரதான மத்திய கல்வி மந்திரியாக நியமிக்கப்பட்டார். தேசிய கல்வி கொள்கை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறிப்பாக, பிஎம் ஸ்ரீ பள்ளிகள், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் தொடர மோதல் போக்கை கொண்டிருந்தார். குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்த காரணத்தால், தமிழ்நாட்டிற்கான பள்ளிக்கல்வி நிதியை நிறுத்தி வைத்தார். இதற்கெல்லாம் சிகரம் வைத்தால் போல், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மற்றும் யுஜிசி, நெட் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் லட்சக்கணக்கான மாணவர்களையும் பெற்றோர்களையும் வீதிக்குக் கொண்டு வந்துவிட்டன.

டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மாணவர்கள் கடந்த 50 நாட்களாக நடத்தி வந்த தீவிரப் போராட்டங்களின் தொடர்ச்சியாக, தர்மேந்திர பிரதான் தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில், புதிய கல்வி மந்திரி யார்? தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் அடுத்த கல்வி மந்திரி யார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் மாணவர்கள் மத்தியிலும் எழுந்தது.

இந்தநிலையில், , நாட்டின் புதிய கல்வித்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

2004-ஆம் ஆண்டு முதல் கர்நாடகா மாநிலத்தின் தார்வாட் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 5 முறை (2004, 2009, 2014, 2019, 2024) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

2014-2016 வரையிலான காலகட்டங்களில் கர்நாடக பாஜகவின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்து கட்சியை வலுப்படுத்தியவர். நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.

நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதிலும், எதிர்க்கட்சிகளை லாவகமாகச் சமாளிப்பதிலும் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மோடியின் மூன்றாவது அமைச்சரவையில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகிய பொறுப்பை வகித்து வருகிறார். தற்போது அவரிடம் கூடுதலாக கல்வித்துறையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்க இருக்கும் கல்வித்துறை மந்திரி தேசிய தேர்வு முகமையை புனரமைப்பது, வேலைவாய்ப்பினை அதிகரிப்பது, மாணவர்கள் மத்தியில் இழந்துபோன நம்பிக்கையை மீட்டெடுப்பது ஆகிய சவால்களை உடனடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சூழலில் உள்ளார்.