தேசிய செய்திகள்

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

79-வது சுதந்திர தினம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். தொடர்ந்து 13-வது ஆண்டாக அவர் செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றுவது குறிப்பிடத்தக்கது.

விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 15-ந் தேதி முதல் செங்கோட்டை பகுதி டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 15-ந் தேதி வரை பொதுமக்கள் செங்கோட்டையை பார்வையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு காரணங்களால் செங்கோட்டை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு கோபுரங்கள்

செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வருகிற 16-ந் தேதி வரை டெல்லி வான்பரப்பில் டிரோன்கள், ஆளில்லா சிறிய விமானங்கள், பாராகிளைடர்கள், பாராமோட்டார்கள், ஹேங் கிளைடர்கள் ஆகியவற்றை இயக்க தடை விதித்து டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். செங்கோட்டை பகுதியில் காற்றாடி பட்டம் பறக்கவிடுவ தற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் வெளியூர் செல்லும் பயணிகள், ரெயிலில் வரும் பயணிகள் ஆகியோரின் உடமைகள் சோதனையிடப்பட்ட பின்பே அனுமதிக்கப்படுகின்றனர்.

மோப்ப நாய்

வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டு உள்ளன. செங்கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இவ்வாறு தலைநகர் முழுவதையும் கையில் எடுத்துள்ள பாதுகாப்பு படையினர் அங்கு மர்ம நபர்களின் நடமாட்டம், ஆயுதங்கள், வெடிபொருட்களின் இருப்பு குறித்து சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.