தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் சாதனை புத்தகம் - துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்

விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த 4 ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பணிகள், சாதனைகள், பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசிய உரைகள் அடங்கிய தொகுப்பு புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், 'ஒடிசாவின் தொலைதூர பழங்குடியின கிராமத்தில் இருந்து நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அலங்கரிக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஊக்கமளிக்கும் பயணம், இந்திய ஜனநாயகத்தின் வலிமைக்கு ஒரு வலுவான சான்றாக திகழ்கிறது.

அரசியலமைப்பு விழுமியங்கள், எளிமை, கருணை மற்றும் பொதுச்சேவை ஆகியவற்றின் மீதான அவரது அர்ப்பணிப்பு என்றென்றும் பாராட்டுக்குரியது' என்றார். இந்த விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.