தேசிய செய்திகள்

6 நாள் பயணமாக சிம்லா வந்தடைந்தார் திரவுபதி முர்மு

ஏப்ரல் 29 அன்று அடல் சுரங்கப்பாதையை பார்வையிடுகிறார் திரவுபதி முர்மு.

சிம்லா.

இமாச்சல பிரதேசத்தில் 27 முதல் மே 2 வரை கோடைக்கால சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் ஜனாதிபதி திரவுபதி. இதனையொட்டி அவர் இன்று காலை சிம்லா வந்தடைந்தார். அவரை அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங், மற்றும் ஆளுநர் கவிந்தர் குப்தா மற்றும் மந்திரிகள் வரவேற்றனர். இந்தப் பயணத்தின் போது, ​​ஜனாதிபதி முர்மு சிம்லாவில் உள்ள மஷோப்ராவில் அமைந்துள்ள ராஷ்டிரபதி நிவாஸில் தங்குகிறார்.

ஏப்ரல் 28 அன்று, சிம்லாவில் உள்ள லோக் பவனில் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள விருந்தில் ஜனாதிபதி கலந்துகொள்கிறார். ஏப்ரல் 29 அன்று, ஜனாதிபதி முர்மு அடல் சுரங்கப்பாதையை பார்வையிட்டு அதில் பயணம் செய்கிறார்.

ஏப்ரல் 30 அன்று, பாலம்பூரில் உள்ள சௌத்ரி சர்வான் குமார் இமாச்சல் பிரதேஷ் கிருஷி விஸ்வவித்யாலயத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார். அதே நாளில், மஷோப்ராவில் உள்ள ராஷ்டிரபதி நிவாஸில் அவர் 'அட் ஹோம்' வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சிம்லாவில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிம்லா நகரம் முழுவதும் 3 பிரிவுகளாக பிரித்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.