புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, 48 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு கௌரவித்தார்.
அதன்பின் பேசிய ஜனாதிபதி, ஆசிரியர்களின் சேவையை பாராட்டிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் மிக குறைவாக இருப்பதற்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சிகளே முக்கிய காரணமாகும். இந்த தேசிய வெற்றிக்கு காரணமான அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஒட்டுமொத்த கல்வி முறைக்கும் பள்ளி கல்வியே மிக முக்கியமான அடித்தளமாக அமைகிறது.
மனித வாழ்க்கையில் அறிவையும் திறன்களையும் நாம் எப்போது வேண்டுமானாலும் பெற்று கொள்ள முடியும். ஆனால், குழந்தை பருவத்தில் கற்றுத்தரப்படும் நன்னடத்தை பாடங்கள் மட்டுமே வாழ்நாள் முழுவதும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தொடக்கக் கல்வி வகுப்புகளிலேயே குழந்தைகளின் அறிவுசார், உடல்சார் மற்றும் ஒழுக்கசார் நிலைகளில் ஆசிரியர்கள் விடாமுயற்சியுடன் கவனம் செலுத்த வேண்டும். இந்தியகுடிமக்களாகவும் உருவாக்க முடியும். இதன் மூலம் நமது ஆசிரியர்கள் எதிர்கால தலைமுறையினரை சிறந்த மாணவர்களாகவும், கடமையுணர்வுள்ள நல்வழியில் நடக்கும் இந்திய குடிமக்களாகவும் உருவாக்க முடியும்.
பல மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். பலர் தங்கள் குடும்பத்தில் முதன்முறையாக கல்வி கற்கும் மாணவர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் மிகுந்த திறமை பெற்றிருந்தாலும், தங்களுக்குள் தன்னம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கையை ஊட்டி, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது ஆசிரியர்களின் மிக முக்கியப் பொறுப்பாகும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்தியாவை உலக அளவில் மிகச்சிறந்த திறன் மையமாக நிலைநிறுத்துவதும், உலக நாடுகளுக்கு மத்தியில் ஒரு அறிவு வல்லரசாக மாற்றுவதும் நமது தேசிய முன்னுரிமைகளில் முதன்மையானதாகும்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். இந்த இலக்கை நாம் எட்ட வேண்டும் என்றால், நம்மிடம் உலகத் தரம் வாய்ந்த கல்வி முறை இருக்க வேண்டும்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.