புதுடெல்லி,
நாடு முழுவதும் நாளை (சனிக்கிழமை) 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவும் அபாயம் காரணமாக 74வது சுதந்திர தின விழா அணி வகுப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழக்கமாக அளிக்கப்படும் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குறைவான எண்ணிக்கையிலே அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பு காட்சிகளை வீட்டிலிருந்தே தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் கண்டு ரசிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவினை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
அதில் முதலாவதாக இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் குடியரசுத் தலைவர் உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும் குடியரசுத் தலைவரின் உரை பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.