தேசிய செய்திகள்

2 நாள் அரசு முறைப்பயணமாக மலேசியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்தார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா புறப்பட்டுள்ளார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா செல்கிறார்.

இந்த பயணத்தின் போது இந்தியா - மலேசியா இடையே வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மற்றும் பிற வணிகப் பிரதிநிதிகளுடனையும் கலந்துரையாட உள்ளார்.

இத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள் உறவுகளைப் பிரதிபலிக்கும் வகையில், 10 ஆவது இந்தியா - மலேசியா தலைமைச் செயல் அதிகாரிகளின் மன்றம் நடைபெறவுள்ளதுமலேசியாவில் 29 லட்சம் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். இது உலகின் மூன்றாவது பெரிய இந்திய வம்சாவளி சமூகமாகும்.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது பிரதமர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்தார். பிரதமர் மோடி அக்டோபர் 26 இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 22 ஆவது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்றார். அக்டோபர் 22 இல் இரு பிரதமர்களும் தொலைபேசி மூலமாகவும் உரையாடினர்.