தேசிய செய்திகள்

75-வது ஆண்டு நிறைவு விழா.. சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு

சோமநாதர் கோவிலில் நடைபெற்ற சோமநாதர் அமுதப் பெருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

சோம்நாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதர் கோவில் பன்னிரு சிவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் அப்போது பொன்னும் பொருளும் நிரம்பி இருந்தன. இதனை கஜினி முகமது கொள்ளையடித்து சென்றதாக வரலாறு உள்ளது. அவர் 17 முறை இந்த கோவிலில் சூறையாடி இருக்கிறார். முகலாய மன்னர்களால் சிதிலமடைந்த இந்த கோவில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் புனரமைக்கப்பட்டது.

கோவில் புனரமைக்கப்பட்ட 75 ஆண்டுகளின் நிறைவு விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 8-ந் தேதியே விழா தொடங்கியது.

மின்னொளியில் ஜொலிக்கும் சோமநாதர் கோவில்

இந்த நிலையில் இன்று நடைபெற்ற பிரதான அமுதப் பெருவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதனை முன்னிட்டு நேற்று இரவே அவர் குஜராத்துக்கு வந்து விட்டார். இன்று காலை சோமநாத் வந்த பிரதமர் மோடி, சோமநாதர் கோவிலில் நடைபெற்ற சோமநாதர் அமுதப்பெருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

விழாவை முன்னிட்டு சோமநாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு வருகை புரிந்து இருப்பதால் எங்கும் பக்தர் வெள்ளமாக காட்சியளிக்கிறது.

முன்னதாக நேற்று குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் சோமநாதர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.