கொச்சி,
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு செல்ல உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். அதன்படி பிரதமர் மோடி இன்று காலை ஆந்திரா சென்றார். ஆந்திரப் பிரதேசத்தின் லெபாக்ஷி என்ற இடத்தில் உள்ள வீரபத்ர சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி 'ஸ்ரீ ராம் ஜெய் ராம்' பஜனை பாடினார்.அயோத்தி ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா நடைபெற இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், ராமாயணத்தில் சிறப்பு வாய்ந்த லெபாக்ஷிக்கு மோடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி கொச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையம் வந்த அவரை கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், கவர்னர் ஆரிப் முகமது கான் ஆகியோர் வரவேற்றனர். கேரளா செல்லும் பிரதமர் மோடி, அங்கு குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும், திரிபிராயர் ராமசாமி கோவிலுக்கும் சென்று வழிபடுகிறார்.