புதுடெல்லி,
டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மோடியை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து தம்பிதுரை கூறியதாவது:-
நிதி உதவி
பிரதமரிடம் 15 நிமிடங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கைகள் பற்றி பேசினேன்.
குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விளக்கி கூறினேன். அந்த பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதிஉதவியும், கடலோர காவல்படையின் உதவியும் தேவை என்று கேட்டேன். புயலால் மீனவர்கள் சிலர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை கண்டுபிடிக்க கடலோர காவல்படை உதவி தேவைப்படுகிறது. இதற்கு ஆவன செய்வதாக பிரதமர் என்னிடம் கூறினார்.
அப்போது உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வந்தார். பிரதமர் அவரை அழைத்து இது தொடர்பாக பேசினார். ராஜ்நாத் சிங் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மத்தியக்குழு
பின்னர் நாங்கள் (அ.தி.மு.க. எம்.பி.க்கள்) மத்திய மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து நிவாரணத்துக்காக நிதி உதவி கேட்டோம். நிவாரணத்துக்கு எவ்வளவு நிதி தேவை? என்பதை ஆராய மத்தியக்குழுவை அனுப்புமாறு முதல்-அமைச்சர் கோரியதை குறிப்பிட்டோம்.
மத்தியக்குழுவை உடனே அனுப்ப தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அனைத்து உதவிகள் செய்வதிலும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவதாகவும் அருண்ஜெட்லி உறுதி அளித்தார்.
இவ்வாறு தம்பிதுரை கூறினார்.