புதுடெல்லி,
வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி என கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப் என பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொருட் சேதம் என அம்மாநிலங்கள் கடும் பாதிப்பில் இருக்கின்றன. அந்தந்த மாநில அரசுகள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டாலும், மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந் நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் முதலாவது நபராக தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என்று மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார்.
இமாச்சல பிரதேசத்தில் விமானம் மூலம் வெள்ள பாதிப்புகளை பிரதமர் பார்வையிட்டார். அவரிடம் வெள்ளத்தினால் எங்கு எங்கு சேதம் ஏற்பட்டு உள்ளது மற்றும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கங்கரா என்ற இடத்தில் மாநில உயர் அதிகாரிகளுடன் மாநிலத்திற்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் தேவையான உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர்மோடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதன் பிறகு, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். , தேசிய பேரிடர் நிவாரண நிதியின் இரண்டாவது தவணை, பிரதமர் கிசான் சம்மான் நிதி ஆகியவற்றை முன்கூட்டியே வழங்கப்படும். பிரதமர் அவாஸ் யோஜனா, தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்பு, பிரதமர் தேசிய நிவாரண பணிகளின் கீழ் மீட்புப் பணிகள் உள்ளிட்டவை செய்து தரப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.