புதுடெல்லி,
ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க கடந்த 27 ஆம் தேதி ஜப்பான் சென்ற பிரதமர் மோடி ஒசாகா நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலந்துரையாடினார். பின்னர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்றார்.
ஜி - 20 மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், துருக்கி அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு ஆலோசனைகளை நடத்தினார். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி - 20 மாநாடு நிறைவுற்றதையடுத்து, ஜப்பானின் ஒசாகா நகரில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தடைந்தார். டெல்லி வந்தடைந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.