கவுகாத்தி,
ஜிந்திலிருந்து சோனிபட் வரை நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரெயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின.
கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரெயில்வே இந்தத் திட்டத்தை 2022, ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது.
ஹைட்ரஜன் ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடந்தன. இதையடுத்து, ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் 22-ம் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
அரியானாவின் ஜிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2,800 பேர் பயணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அரியானாவின் ஜிந்த்-சோனிபட் இடையே அதிநவீன ஹைட்ரஜன் ரெயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. டீசல் ரெயில்களுக்கு மாற்றான ஹைட்ரஜன் ரெயிலில் இருந்து நீரும், நீராவியும் மட்டுமே கழிவாக வெளியேறும்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயில், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 10 பெட்டிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுள்ளது.