தேசிய செய்திகள்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூர் பிரதமருடன், பிரதமர் மோடி பேச்சு

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூர் பிரதமருடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

இந்தியா உள்பட உலக நாடுகளை உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளதோடு, உயிர்ப்பலியையும் வாங்கி வருகிறது. வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவை விட , உலக வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலக முழுவதும் 2,736,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி, கடந்த சில தினங்களாக ஆலோசித்து வருகிறார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் சுகாதார சவால்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்தத் தகவல்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.