திருவனந்தபுரம்,
நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. அதில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் உள்ளது குறித்து மத்திய அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளா கோட்டயத்தை சேர்ந்த எம். பீட்டர் என்பவர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையை பறிப்பதாக சொல்லி நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு வாரங்களில் இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கம் கொடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசும், பிரதமரும் தங்களது கடமையையே செய்துள்ளனர். இதற்காக சான்றிதழில் படம் போடக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்த படம் சிக்கலை கொடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழையும் நீதிபதியின் பார்வைக்காக சமர்ப்பித்திருந்தார். அந்த சான்றிதழ்களில் அந்நாட்டு தலைவர்களின் படங்கள் இடம் பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.