தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதியின் இருப்புத்தொகை ரூ.8,452 கோடியாக உயர்வு

நிவாரண நிதியின் 93% பணம் நிலையான வைப்புத்தொகைகளில் வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பொது அறக்கட்டளை

கொரோனா காலத்தின்போது பொது சுகாதார அவசரநிலை அல்லது இயற்கையான வேறு எந்த வகையான அவசரநிலை, பேரழிவு போன்றவற்றுக்கு நிவாரணம் அல்லது உதவியை மேற்கொள்வதற்காக பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (பிஎம் கேர்ஸ் பண்ட்)' என்ற பெயரில் ஒரு பொது அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இது, 2020-ம் ஆண்டு மார்ச் 27-ந் தேதி டெல்லியில் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிதியத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார். பாது காப்பு மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் நிதி மந்திரி ஆகியோர் அந்த நிதியத்தின் பதவிவழி அறங்காவலர்களாகவும் உள்ளனர். இந்த நிதியத்தின் 2023-2024-ம் ஆண்டு மற்றும் 2024-2025-ம் ஆண்டின் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி 2023-2024-ம் ஆண்டில் இருப்புத்தொகை, வட்டி மற்றும் பிற வரவுகள் மூலம் ரூ.7,188.63 கோடியாக இருந்தது.

தொகை உயர்வு

இது 2024-2025-ம் ஆண்டில் (மார்ச் 31-ந் தேதியன்று) ரூ.8452.94 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் வட்டி மட்டும் ரூ.469.37 கோடி ஆகும். நன்கொடைகளைப் பொறுத்தவரை முந்தைய ஆண்டைவிட 2024-2025-ம் ஆண்டில் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டில் உள்நாட்டு நன்கொடை ரூ.681.81 கோடி ஆகும். இது 2024-2025-ம் ஆண்டில் ரூ.479.04 கோடியாக குறைந்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை முந்தைய ஆண்டு ரூ.1.13 கோடியாக இருந்தது. 2024-2025-ம் ஆண்டு ரூ.92.82 லட்சமாக குறைந்து இருக்கிறது.

இறுதி இருப்பு ரூ.8,452 கோடி

பண செலுத்துதல்களைப் பொறுத்தவரை 2024-2025-ம் ஆண்டில் குழந்தைகள் நல திட்டத்துக்கு ரூ.87.84 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ.15.37 கோடியாக இருந்தது. எல்லாம் போக இறுதி இருப்பு 2024-2025-ம் ஆண்டில் ரூ.8 ஆயிரத்து 452 கோடியே 6 லட்சத்து 70 ஆயிரத்து 758 ஆக உள்ளது.

நிவாரண நிதியின் 93% பணம் நிலையான வைப்புத்தொகைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த நிதியில் பெறப்பட்ட நன்கொடைக்கு ஈடான தொகை 2024-25 ம் ஆண்டில் வட்டியாக கிடைத்துள்ளது.